மம்தா பானர்ஜி தான் பிரதமராக வேண்டும்.. பாஜகவால் மிரட்டவே முடியாது.. பற்ற வைத்த சுப்ரமணியன் சுவாமி!
கொல்கத்தா : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தான் நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 2024 தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க பல்வேறு தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் சுப்ரமணியன் சுவாமியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார் சுப்ரமணியன் சுவாமி. அப்போது பேசிய அவர், "நாட்டிற்கு அதிகாரத்தில் உள்ளவர்களால் அச்சுறுத்த முடியாத ஒரு உண்மையான எதிர்க்கட்சி தேவை என்று நினைக்கிறேன். எனக்கு நிறைய தலைவர்களை தெரியும். ஆனால், அவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு கட்டத்திற்கு மேல் போகமாட்டார்கள்.

ஏனென்றால் அமலாக்கத்துறை அல்லது வேறு ஏதாவது ஒரு விசாரணை அமைப்புகள் மூலம் தங்கள் மீது நடவடிக்கை பாயும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். இதுபோன்ற விஷயங்கள் இந்திய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஆளுங்கட்சிக்கு நண்பர் அல்லாத ஒருவர் தான் தற்போது நாட்டிற்குத் தேவை. அதுபோன்ற பலரை நாம் காணலாம். இந்த நடவடிக்கைகளை சிலர் பகிரங்கமாகவும், சிலர் சத்தமின்றியும் செய்கின்றனர்.
மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக வேண்டும். அவரை மிரட்ட முடியாது. மம்தா பானர்ஜியை அச்சுறுத்துவது என்பது சாத்தியமற்றது. அவர் ஒரு துணிச்சலான பெண். அவர் எப்படி கம்யூனிஸ்டுகளை எதிர்த்துப் போராடினார் என்பதைப் பாருங்கள். நான் அவரை 10 நாட்களுக்கு முன்பு சந்தித்தேன், ஆனால் அது யாருக்கும் தெரியாது.
அந்தச் சந்திப்பின்போது 2024 எப்படி இருக்கும், அப்போது பொருளாதாரத்தின் வடிவம் என்னவாக இருக்கும் என்று விவாதித்தோம். நாட்டிலேயே மிகவும் சக்திவாய்ந்த பெண்மணியாக ஒரு காலத்தில் ஜெயலலிதா இருந்தார். அதற்கு பின்பு மாயாவதி சக்திவாய்ந்த பெண்மணியாக இருப்பார் என கருதினேன். ஆனால், தற்போதைய சூழலில் நாட்டின் வலிமையான பெண் என்றால் அது மம்தா பானர்ஜி தான்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications