வாக்கு எண்ணிக்கை முடியும் முன்பே அதிரடியை ஆரம்பித்த மம்தா.. ஆட்சி அமைக்க நாளை உரிமை கோருகிறார்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நாளை மாலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் மற்றும் புதுவையில் மட்டும் ஆளும்கட்சி தோல்வியடைந்துள்ளது.
கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சியே மீண்டும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சியை பிடித்த திரிணாமுல்
குறிப்பாக மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 215 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 75 தொகுதிகளில் முன்னிலையில் பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே மிகக் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் எளிதாகவே வெற்றி பெற்றுள்ளது.

மம்தா அதிர்ச்சி தோல்வி
இருப்பினும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்துள்ளது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், முதலில் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு, பின்னர் மீண்டும் தோல்வியடைந்ததாகத் தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளதாகவும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளேன் என்றும் திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்
திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் மிகப் பெரிய ஒரு வெற்றியைப் பெற்றுள்ளதால், மம்தா பானர்ஜி தனது தோல்வி பற்றி மம்தா பெரிதாகக் கவலை கொள்ளவில்லை என்றே தெரிகிறது. அவர் உடனடியாக அடுத்த கட்ட வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். மம்தா பானர்ஜி நாளை மாலை 7 மணிக்கு அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஆளுநர் ஜகதீப் தங்கர் தனது ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

மம்தாவால் முதல்வராக முடியும்
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக திரிணாமுல் ஆட்சி அமைகிறது. முதலில் 2011இல் ஆட்சி அமைத்த மம்தா, 2016 தேர்தலிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். இந்த முறை மம்தா பானர்ஜி எம்எல்ஏ-ஆக வெற்றி பெறாத போதிலும் அவரால் முதல்வராக முடியும். அடுத்த 6 மாதங்களுக்குள் அவர், சட்டசபை உறுப்பினரால் போதும். கடந்த 2017இல் உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத், 2016இல் புதுவையில் நாராயணசாமி ஆகியோர் முதல்வரான பின்னரே எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications