சிறந்த மதச்சார்பற்ற பிரதமராக மமதா திகழ்வார்: இமாம் புகாரி புகழாரம்
டெல்லி: நாட்டின் சிறந்த மதச்சார்பற்ற பிரதமராக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி திகழ்வார் என்று டெல்லி ஜூம்மா மசூதியின் இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் மமதா பானர்ஜி நிச்சயமாக பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைய மாட்டார் என நம்புகிறோம். மேற்கு வங்க மாநிலத்தில் சிறுபான்மையினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார் மமதா பானர்ஜி.
மமதா பானர்ஜியைப் போல ஒரு மதச்சார்பற்ற தலைவர்தான் நாட்டுக்கு இப்போதைய தேவை. தற்போதைய லோக்சபா தேர்தலில் முன்னிறுத்தப்படக் கூடிய பிரதமர் வேட்பாளர்களில் மதச்சார்பின்மையில் உறுதியானவராக இருப்பவர் மமதாதான் என்பது என் தனிப்பட்ட கருத்து.
பாரதிய ஜனதாவைத் தவிர்த்த இதர கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுக்கு சச்சார் கமிட்டி பரிந்துரைகளின் நிலைமை என்ன என்பது குறித்து கடிதம் எழுதினேன். அதில் மமதா பானர்ஜி ஒருவர் மட்டுமே என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறோம் என்பதை விரிவாக தமது பதிலில் அனுப்பியிருந்தார்.
இவ்வாறு இமாம் புகாரி கூறினார்.