புத்தி பேதலிச்சுப் போச்சா மமதா பானர்ஜிக்கு.. குஜராத் முதல்வர் பரபர தாக்கு!
அகமதாபாத்: மேற்கு வங்க மாநில முதல்வராக உள்ள மம்தா பானர்ஜி, ஒரு மனநோயாளி போல நடந்து கொள்வதாக, குஜராத் முதல்வரான விஜய் ரூபானி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. அப்போது திடீரென அங்கிருந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாரதிய ஜனதாவினருக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது.

இந்த மோதல் சிறிது நேரத்தில் பயங்கர கலவரமாக வெடித்தது. கலவரத்தின் போது அங்கிருந்த சமூக சீர்திருத்தவாதி ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலை அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டது. வித்யாசாகர் சிலையை உடைத்தது பாஜக-வினர் தான் என்றும், இல்லை திரிணாமுல் காங்கிரசார் தான் என்றும் இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன.
ஆனால் இந்த வன்முறைக்கு பாஜக கட்சியினரே காரணம் என மம்தா புகார் கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தும் வருகிறார். இந்நிலையில் சம்பவம் குறித்து பாரதிய ஜனதாவை சேர்ந்த, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ரூபானி, சமீப காலமாக மம்தா பானர்ஜி தனது மன சமநிலையை இழந்து விட்டதாக கடுமையாக சாடினார். மன சமநிலையை இழந்ததன் மூலம், மனநோயாளி போல ஜனநாயகத்தை படுகொலை செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
மம்தா பானர்ஜி தனது செல்வாக்கை இழந்து விட்டார் என்ற ரூபானி, அவர் ஜனநாயகத்தை களங்கப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மம்தாவின் இத்தகைய நடவடிக்கைகளை இந்திய மக்களாயினும், மேற்குவங்க மக்களாயினும் ஒருபோதும் சகித்து கொள்ள மாட்டார்கள் என்றார்.
இதற்கெல்லாம் சேர்த்து மம்தாவுக்கு தேர்தலில் மேற்கு வங்க மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். தேர்தல் முடிவுகள் மம்தாவுக்கு சரியான பாடத்தை புகட்டுவதாக அமையும் என ரூபானி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications