ஓவர் போதை.. 18 யானைகளுடன் சண்டையிட்ட நபர் பரிதாபப் பலி!
போதையில் யானைகளுடன் சண்டையிட முயற்சித்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஞ்சி: ஜார்கண்ட்டில் குடி போதையில் யானைக் கூட்டத்திடம் சண்டை போட முயற்சித்த நபர், யானைகளால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜார்கண்ட் மாநிலம் கக்சாவைச் சேர்ந்தவர் மனேல் ஹெம்ப்ரோம் என்ற 30 வயது இளைஞர். கடந்த திங்களன்று வனப்பகுதியை ஒட்டிய இவரது குடியிருப்புப் பகுதியில் 18 யானைகள் கூட்டமாக நுழைந்தது. கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் யானைக் கூட்டம் துவம்சம் செய்துள்ளது. இதனால் பயத்தில் அலறிய கிராமமக்கள், பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடி ஒளிந்துள்ளனர்.
இதனை எல்லாம் குடிபோதையில் இருந்த மனேல் பார்த்துள்ளார். யானைகள் மீது கோபம் கொண்ட அவர், அவற்றின் முன் சென்று சினிமா பாணியில் சண்டையிட முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யானைகள், மனேலை பலமாகத் தாக்கின. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாங்கள் எவ்வளவோ தடுத்தும் போதையில் இருந்த மனேல் அவற்றைப் பொருட்படுத்தாமல் யானைகள் முன் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.