ஹரித்துவார்: பிரெட் பொட்டலத்தில் கோழிக்குஞ்சு தலை!
ஹரித்துவார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடையில் வாங்கிய பிரெட் பாக்கெட்டில் கோழிக்குஞ்சு தலை இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹரித்துவாரில் உள்ள ஷேக்புரா கிராமத்தை சேர்ந்தவர் அஜய். இவர் நேற்று காலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடை ஒன்றிலிருந்து பிரெட் பாக்கெட் வாங்கி வந்துள்ளார். வேலைக்கு புறப்படும் சமயம் காலை டிபனுக்காக தான் வாங்கி வந்த பிரெட் பாக்கெட்டை திறந்துள்ளார். அப்போது அதனுள் கோழிக்குஞ்சு தலை ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.
அவரது குரலை கேட்டு, குடும்பத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, அவர்களும் பிரெட் பாக்கெட்டில் இருந்த கோழிக்குஞ்சு தலையை பார்த்து அதிர்ந்து போயினர்.

இதனையடுத்து அஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக பிரெட் பாக்கெட் வாங்கிய கடைக்காரரிடம் சென்று நடந்ததை கூறி, விளக்கம் கேட்டு சத்தம் போட்டனர். ஏராளமானோர் கடைமுன்பு திரளவே பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே இதுகுறித்து அப்பகுதியின் வர்த்தக சங்கத் தலைவர் அடுல் குப்தாவிடம் புகார் கொடுத்தார் அஜய். இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி அங்கு விரைந்து வந்து, குறிப்பிட்ட பிரெட்டை விற்ற கடைக்காரரிடம் விளக்கம் கேட்டார்.
ஆனால் கடைக்காரரோ, தாம் மொத்த விநியோகஸ்தரிடமிருந்து பிரெட் பாக்கெட்டை மொத்தமாக வாங்கி விற்றதாகவும், அடைக்கப்பட்ட பாக்கெட்டினுள் கோழிக்குஞ்சு தலை இருந்ததது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்.
இதனையடுத்து அந்த பிரெட் பாக்கெட்டுகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்பிய பிரெட் கம்பெனிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட முதன்மை உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஹரித்துவார் நகரைச் சுற்றி 15 கிலோமீட்டருக்கு அசைவ உணவு விற்பதற்கு தடை உள்ளது. ரிஷிகேஷ் நகருக்கு அருகில் உள்ள சிறிய உணவகம் ஒன்றில்தான் அசைவ உணவு விற்பனை செய்யப்படுகிறது. அப்படி இருக்கும்போது ப்ரெட் பொட்டலத்தில் கோழிக்குஞ்சு தலை வந்தது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது.












Click it and Unblock the Notifications