ஹஸாரே பெயரை தவறாக பயன்படுத்துவியா?: கெஜ்ரிவால் மீது மை வீசிய பாஜக ஆதரவாளர்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தான் ஒரு பாஜக ஆதரவாளர் என்று தெரிவித்த நபர் கருப்பு மையை வீசி தாக்குதல் நடத்தினார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நேற்று மாலை பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அந்த அரங்கில் திடீர் என்று சலசலப்பு ஏற்பட்டது.
என்னவென்று பார்த்தால் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நச்சிகேதா என்பவர் அரங்கிற்குள் நுழைந்து கெஜ்ரிவாலை நோக்கி வந்தார்.

மை வீச்சு
நச்சிகேதா கெஜ்ரிவால் அருகே வந்து அவர் மீது கருப்பு மையை வீசினார். உடனே அருகில் இருந்த ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் மனிஷ் சிசோடியா கெஜ்ரிவாலின் முகத்தில் பட்ட மையை துடைத்தார்.

அன்னா ஹஸாரே
ஜெக்ரிவால் அன்னா ஹஸாரேவின் பெயரை தவறாக பயன்படுத்துவதாக நச்சிகேதா குற்றம் சாட்டினார். அன்னா தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியும் இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்றார் அவர். அவர் தன்னை அன்னா மற்றும் பாஜக ஆதரவாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

கெஜ்ரிவால்
இந்த சம்பவத்தால் அரங்கில் பதட்டம் ஏற்பட்டது. இருப்பினும் ஜெக்ரிவால் தனது பேச்சை தொடர்ந்தார். இதற்கிடையே நச்சிகேதாவை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

எனக்கு தொடர்பில்லை
மை வீச்சு சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே தெரிவித்துள்ளார். மேலும் தனது பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று அவர் கெஜ்ரிவாலை கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications