டெல்லியில் 'செல்லக்குட்டி'யை காப்பாற்ற நீரில் குதித்த வாலிபர் பலி
டெல்லி: கிழக்கு டெல்லியில் நீர் கால்வாயில் விழுந்த தனது செல்ல நாயை காப்பாற்ற நீரில் குதித்த வாலிபர் பலியானார்.
கிழக்கு டெல்லியை சேர்ந்தவர் பல்ராம்(20). அவர் திங்கட்கிழமை மாலை தனது செல்ல நாயுடன் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். இரவு 9.45 மணி அளவில் புதிய அசோக் நகர் பகுதியில் உள்ள நீர் கால்வாய் அருகே நடந்து சென்றுள்ளார்.
அப்போது பல்ராமின் நாய் நீரில் விழுந்துவிட்டது. இதை பார்த்த பல்ராம் நாயை காப்பாற்ற நீரில் குதித்தார். ஆனால் அவர் நீரில் மூழ்கினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினர் வந்த வேகத்தில் நாயை காப்பாற்றி நீரில் இருந்து வெளியே தூக்கி வந்தனர். ஆனால் பல்ராமை தேடியும் கிடைக்கவில்லை.
பின்னர் இரவு 11.45 மணிக்கு அவரின் உடல் கிடைத்தது. உடனே மருத்துவமனைக்கு பல்ராமை தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.