போலீஸ் நிலையத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் அடித்துக் கொலையா?
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் திருட்டுப் புகார் காரணமாக சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் போலீஸ் நிலையப் பகுதியிலேயே தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்டிரம் மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள நாகாபூர் கிராமத்தை சேர்ந்தவர் துக்காராம் சம்பாஜி ஜோக்தண்ட்(25). மோட்டார் சைக்கிள் திருட்டு புகார்கள் தொடர்பாக இவர் மீது போலீசாரின் சந்தேகக் கண் விழுந்தது. இதனால், துக்காராமைப் போலீசார் விசாரணைக்காக அப்பகுதியில் உள்ள பார்லி சிட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் துக்காராம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
எப்போதுமே போலீசாரின் நடமாட்டம் நிறைந்த அந்த வளாகத்தில் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொள்ள சாத்தியமில்லை என்பதால், போலீசாரே துக்காராமை அடித்துக் கொன்றுவிட்டு, மரத்தில் தொங்க விட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் நவீன்சந்திரா ரெட்டி தெரிவித்துள்ளார்.