பெங்களூரில் கொடூரம்.. கடனை திருப்பி தராத நண்பரின் தலையை துண்டித்த வாலிபர்
பெங்களூரு: கடனை திருப்பி கொடுக்க மறுத்த நண்பரின் தலையை அரிவாளால் துண்டித்த வாலிபர் ரத்தம் சொட்ட சொட்ட தலையுடன் போலீசில் சரணடைந்த சம்பவம் பெங்களூருரில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் சசிகுமார்(24). இவரும் அதே பகுதியில் வசிக்கும் கார் டிரைவர் மஞ்சுநாத்(23) என்பவரும் நண்பர்கள். சசிகுமார் தனது நண்பர் மஞ்சுநாத்துக்கு அவசர தேவைக்காக ரூ.25 ஆயிரம் கடனாக கொடுத்திருந்தார்.
பல மாதங்கள் ஆகியும் மஞ்சுநாத் அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மஞ்சுநாத்தின் வீட்டிற்கு சென்ற சசிகுமார் கடனை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு மஞ்சுநாத் வழக்கம் போல் தர மறுத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த சசிகுமார், தான் எடுத்து கத்தியால், மஞ்சுநாத்தின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சுருண்டு கீழே விழுந்ததும், தலையை மட்டும் துண்டித்து பைக் பெட்டியில் வைத்து கொண்டு, போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றார்.
அங்கு போலீசார் முன்பு ரத்தம் சொட்ட சொட்ட தலையுடன் சரணடைந்த அவர், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காததால் கொலை செய்ததாக கூறினார். அவரது வாக்குமூலத்தை பெற்ற போலீசார் சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.