பிற ஆண்களுடன் போன், ஃபேஸ்புக்கில் அரட்டை: மனைவியை ஆற்றில் தள்ளி கொன்ற கணவன்
கான்பூர்: உத்தர பிரதேசத்தில் பிற ஆண்களுடன் போன் மூலம் அரட்டை அடித்ததுடன், ஃபேஸ்புக்கிலும் சாட் செய்த மனைவியை கணவர் கங்கை நதியில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ரவி சவ்ராசியா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது முதல் மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு ரவி ரூபி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ரூபி பிற ஆண்களுடன் போனில் அரட்டை அடிப்பதுடன், ஃபேஸ்புக்கிலும் சாட் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கங்கை நதிக்கரை பக்கம் அவர்கள் சென்றபோதும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரூபி நான் கங்கையில் குதித்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஆனால் ரவியோ நிஜமாகவே ரூபியை கங்கை நதியில் தள்ளிவிட அவர் நீரில் மூழ்கி பலியானார். ரூபி நீரில் மூழ்கியதும் ரவி அங்கிருந்து ஓட முயன்றுள்ளார். ஆனால் சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ரூபியின் உடல் ஞாயிற்றுக்கிழமை இரவு நதியில் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.