மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கொடூரம்.. டெல்லி அருகே ஓடும் ரயிலில் இளைஞர் அடித்து கொலை
மாட்டிறைச்சி உண்டதாக டெல்லி அருகே ஓடும் ரயிலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
டெல்லி: மாட்டிறைச்சி உண்ணக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் டெல்லி அருகே ஓடும் ரயிலில் இளைஞர் ஒருவர் மாட்டுக் கறி சாப்பிட்டதாக அடித்துக் கொல்லப்பட்டார்.
ஹரியாணாவில் இருந்து டெல்லிக்கு 4 இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகைக்கு துணிமணிகளை வாங்க வந்திருந்தனர். அப்போது அனைத்தையும் வாங்கிவிட்டு ஹரியாணாவுக்கு திரும்ப டெல்லி- பல்லப்கார் பயணிகள் ரயிலில் துக்லகாபாதில் ஏறினர்.
அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி ஒரு கும்பல் 4 பேரின் மீது கத்தி, கூர்மையான ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. ரயிலில் ஏராளமான பயணிகள் இருந்தும் யாரும் அவர்களை தடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் மதுரா செல்லும் வழியில் உள்ள அசாவதி ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து வீசினர். 4 பேரில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
மற்ற 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீஸாரையும் அவசர உதவி எண்ணை அழைத்தும் பலனில்லை என்றனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.