பேண்ட்டிற்குள் பாம்பு நுழைந்தது தெரியாமல் பைக் ஓட்டிய இளைஞர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
பேண்ட்டிற்குள் பாம்பு நுழைந்தது தெரியாமல் பைக் ஓட்டிச் சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

பெங்களூரு: கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் பேண்டிற்குள் பாம்பு நுழைந்தது கூடத் தெரியாமல், பைக் ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நராகுண்ட் நகரைச் சேர்ந்த வீரேஷ் கடேமணி (32), சிறிய உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் தனது உணவகத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்க மார்க்கெட் சென்றுள்ளார் வீரேஷ். அப்போது அவரது பேண்டிற்குள் ஏதோ ஊர்வதை உணர்ந்துள்ளார் அவர்.
ஆனால், மழையில் நனைந்திருந்ததால் பேண்ட் துணி தான் அவ்வாறு உள்ளது என அலட்சியமாக இருந்துள்ளார். சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக அதே குறுகுறுப்புடன் பைக்கில் சுற்றியுள்ளார் வீரேஷ்.

பாம்பின் வால்:
நண்பர்களைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, எதேச்சையாக தனது கால் பகுதியில் பாம்பின் வால் போன்று தெரிவதைக் கண்டு வீரேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அருகில் இருந்த கடைக்குள் சென்று, தனது பேண்ட்டைக் கழற்றிப் பார்த்த அவருக்கு மயக்கம் வராத குறை.

விலகாத பயம்:
பாம்பு சென்ற பின்னும் வீரேஷின் அச்சம் தீரவில்லை. இதனால், அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு வீரேஷை பரிசோதித்த மருத்துவர்கள், அதிர்ஷ்டவசமாக அவரை அப்பாம்பு கடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். ஆயினும் சில முதலுதவி சிகிச்சைகளுக்குப் பின், வீரேஷ் வீடு திரும்பினார்.

சூடான என்ஜின் :
மார்க்கெட்டுக்குச் செல்வதற்கு முன் வீரேஷ், தனது பைக்கை மரப் பொருட்கள் அடுக்கி வைத்திருந்த பகுதியில் நிறுத்தி வைத்துள்ளார். அப்போது மழைக்கு ஒதுங்கிய பாம்பு, அவரது பைக்கின் இன்ஜின் பகுதியில் சென்று மறைந்துள்ளது. பின்னர் வீரேஷ் பைக்கில் ஏறியதும், இன்ஜின் சூடானதால் வெளியே வந்த அது, வீரேஷின் பேண்ட்டிற்குள் நுழைந்திருக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications