நடுவானில் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து.. வெளியே குதிக்க முயன்ற நபர்.. அடுத்து பகீர்! பரபரப்பு
அகர்தலா: கவுஹாத்தி- அகர்தலா விமானத்தில் இளைஞர் ஒருவர் திடீரென நடுவானில் எமர்ஜென்சி கதவைத் திறந்து வெளியே குதிக்க முயன்ற சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் விமான பயணங்களுக்கான மவுசு அதிகரித்தே வருகிறது. கொரோனா ஆண்டுகளைத் தவிர ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

இதனால் இந்தியாவில் விமான நிறுவனங்கள் மத்தியிலும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும் நடுவானில் பயணிகள் செய்யும் சில காரியங்கள் முகம் சுளிக்க வைப்பதாக இருக்கிறது. அவை சில சமயம் பயணிகளின் உயிரையும் கூட ஆபத்தில் தள்ளுகிறது.
ஷாக் சம்பவம்: அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது விமானத்தில் நடந்துள்ளது. கவுஹாத்தி- அகர்தலா இண்டிகோ விமானத்தின் அவசரக் கதவை இளைஞர் ஒருவர் திறக்க முயன்றுள்ளார். அந்த நபர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் விமானத்திலிருந்து குதிக்க நினைத்தே இப்படிச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தால் நடுவானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு திரிபுராவின் ஜிரானியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிஸ்வஜித் தேபாத்.. 41 வயதான இவர் தான், விமானத்தில் அத்தனை பேரின் உயிரை ஆபத்தில் தள்ளும் வகையில் நடுவானில் விமானத்தின் எமெர்ஜென்சி கதவைத் திறக்க முயன்றுள்ளார். அவரை அங்கிருந்த விமான குழு தடுக்க முயன்றுள்ளது. இருப்பினும், அவர்களைத் தள்ளிவிட்டு விமானத்தின் எமெர்ஜென்சி கதவை அவர் திறக்க முயன்றுள்ளார்.
பெரும் போராட்டத்திற்கு பிறகே அவரை பிடித்து அமைதிப்படுத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபரைக் கைது செய்துள்ளதாக அகர்தலா அபிஜித் மண்டல் விமான நிலையக் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி பிடிஐயிடம் தெரிவித்தார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் மண்டல் கூறினார்.
முயற்சி: இது குறித்து நடுவானில் எமெர்ஜென்சி கதவைத் திறக்க முயன்ற பிஸ்வஜித் தேபாத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் கூறுகையில், "பிஸ்வஜித் மன அழுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு இருந்தார். இதன் காரணமாகவே அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருக்கிறார். நடுவானில் எமெர்ஜென்சி கதவைத் திறந்து விமானத்தில் இருந்து குதிக்க முயன்றதாக எங்களிடம் சொன்னார். இது குறித்து அடுத்தகட்ட விசாரணையைச் செய்து வருகிறோம்" என்று கூறினார்.
திரிபுராவில் இருக்கும் மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்க விமானம் ரெடியாகிக் கொண்டிருந்தது. அப்போது ஏர்போர்ட்டில் இருந்து சுமார் 15 மைல் தூரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது தான், அந்த நபர் எமெர்ஜென்சி கதவைத் திறந்து குதிக்க முயன்றுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் நடந்துள்ளது.
பெரும் விபத்து தவிர்ப்பு: அந்த நபர் எமெர்ஜென்சி கதவைத் திறக்க முயல்வதைச் சரியாகக் கவனித்த விமான குழுவினர், அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன் பிறகு விமானம் அகர்தலாவில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமான குழுவினர் துரிதமாக எடுத்த நடவடிக்கை காரணமாகவே பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டும் கவனிக்காமல் விட்டு, நடுவானில் எமர்ஜென்சி கதவு திறக்கப்பட்டிருந்தால் மோசமான விபத்து ஏற்பட்டிருக்கும்.












Click it and Unblock the Notifications