சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறப்பு
சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்: சபரிமலை சுவாமி ஐய்யப்பன் கோவிலில் கடந்த 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அன்று மாலை கோவில் நடை அடைக்கப்பட்டது. தற்போது சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை நடைபெறவுள்ளது. இதையொட்டி கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சுவாமி அய்யப்பனுக்கு தீபாராதனை மட்டும் காட்டப்படும். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் 31-ந்தேதியில் இருந்து சுவாமி ஐய்யப்பனுக்கு நெய் அபிஷேகம், படிபூஜை உள்பட விசேஷ பூஜைகள் நடைபெறும். மேலும் 11-ந் தேதி பேட்டை துள்ளலும் நடைபெறும்.

மகரவிளக்கு பூஜையின் போது சுவாமி ஐய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து 12-ந்தேதி ஊர்வலமாக புறப்படுகிறது. 13-ந்தேதி இந்த ஊர்வலம் பம்பை வந்தடைகிறது. அங்கு பம்பை விளக்கு, பம்பை சத்யா நடைபெறுகிறது. அன்று மாலை சுவாமி ஐய்யப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்படும்.
14-ந் தேதி மாலை 6.30 மணிக்கு பிரசித்திபெற்ற மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. அப்போது பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் சுவாமி ஐய்யப்பன் காட்சி தருவதாக ஐதீகம். மகர ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சபரிமலை ஐயப்பன்கோவில் அமைந்துள்ள பகுதியிலும், பம்பையிலும் கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications