இதைக் கட்டினா இயற்கையாக உணர்வீர்களாம்.. மந்திரா பேடி டிசைன் செய்த புது சேலை
டெல்லி: டிவி நடிகை, தொகுப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பல அவதாரம் எடுத்து தற்போது பேஷன் டிசைனராக புதிய அவதாரம் பூண்டு வலம் வரும் மந்திரா பேடி புதிய ரக சேலைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
வழக்கமான சேலை போலத்தான் இவை தெரிகின்றன. ஆனால் இவை இயற்கையை கான்செப்ட் ஆக வைத்து வடிவமைத்தவை என்று விளக்கம் தருகிறார் மந்திரா பேடி.
இந்த புதிய ரக சேலைகளை தனது சொந்த ஊரான டெல்லியில் வைத்து அறிமுகம் செய்துள்ளார் மந்திரா. இந்த சேலை ரகங்களை தான் ரசித்து விரும்பி செய்ததாகவும் பெருமையுடன் கூறுகிறார் மந்திரா.
குளிர்காலமும் - வசந்த காலமும்
எனக்கு குளிர்காலமும், வசந்த காலமும் ரொம்பப் பிடிக்கும். அதை விட இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் நேசிப்பவள் நான். எனவேதான் அவற்றை எனது புதிய சேலை ரகங்களில் கொண்டு வந்துள்ளேன் என்று கூறுகிறார் மந்திரா.
இயற்கை சேலைகள்
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், எனது இந்த புதிய சேலை ரகத்தில் நான் ரசித்த குளிர்காலமும், வசந்த காலமும் இடம் பெற்றிருக்கும். இதில் நான் நினைத்தது போன்ற டிசைனை கொண்டு வந்துள்ளேன். இயற்கைக்கு இதில் நிறைய இடம் கொடுத்துள்ளேன் என்றார்.
16 வகை சேலைகள்
மொத்தம் 16 வகையான சேலைகளை மந்திரா பேடி களம் இறக்கியுள்ளார். இவற்றை மாடல்கள் கட்டி வந்து அழகு காண்பித்தனர். மந்திராவும் ஒரு சேலையில் வந்தார். கிராபிக் டிசைனும், பாரம்பரியமும், இயற்கையின் அம்சங்களும் கை கோர்த்துக் காணப்படுகின்றன இந்த சேலையில்.
போக்குவரத்து குறியீடுகளுடன்
சேலைகளில் நாம் அன்றாடம் பார்க்கும் சில விஷயங்களையும் பொருத்தி அழகு பார்த்துள்ளார் மந்திரா. உதாரணத்திற்கு போக்குவரத்து குறியீடுகளையும் இதில் இடம் பெற வைத்து கலகலப்பூட்டியுள்ளார்.
நான்கு சேலைகளில் இயற்கை
இந்த 16 வகை சேலைகளில் 4 ரக சேலைகளில் பூக்கள், இலைகள், சிறகுகள் ஆகியவை இடம் பெற்றுள்ளதாக கூறுகிறார் மந்திரா பேடி. முதல் முறையாக சில எம்பிராய்டரி வேலைகளையும் இதில் அறிமுகப்படுத்தியுள்ளேன். எம்பிராய்டரி இல்லாமல் இப்போது எந்த துணியையும் நாம் பார்க்க முடியாது. அது அழகாகவும் இருக்கிறது. எனவேதான் எனது படைப்புகளில் முதல் முறையாக எம்பிராய்டரிக்கும் இடம் கொடுத்துள்ளேன் என்றார் அவர்.
நல்லாதான் இருக்கு சேலைகள் எல்லாம்.. ஆளுக்கு ஒன்னா வாங்கி ஆதரவு கொடுங்கம்மா மந்திராவுக்கு!