அட.. அதுக்குள்ள படம் அனுப்பிடுச்சிப்பா மங்கள்யான்.. 'ஹெலனை' கிளிக் செய்தது!
ஸ்ரீஹரிகோட்டா: கடந்த நவம்பர் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட செவ்வாய் கிரக ஸ்பெஷல் விண்கலமான மங்கள்யான், நேற்று தனது முதல் படத்தை அனுப்பியுள்ளது.
ஹெலன் புயலின் நிலையை அது படம்பிடித்துள்ளது.
மங்கள்யான் ஏவப்பட்ட பின்னர் அது நமக்கு அனுப்பியுள்ள முதல் படம் இதுதான்.

உள்ளூர் தொழில்நுட்பத்தில்
முழுக்க முழுக்க உள்ளூர் தொழில்நுட்பத்துடன் இஸ்ரோவின் முதல் முயற்சியாக மங்கள்யான் செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்ய கடந்த நவம்பர் 5-ம் தேதி விண்ணுக்குக் கிளம்பியது.

டிசம்பர் முதல் செவ்வாயை நோக்கி
ஐந்து கட்டங்களாக அதன் சுற்றுவட்டப் பாதை அதிகரிக்கப்பட்டு இப்போது நிலையாக பயணித்து வருகிறது. வரும் டிசம்பர் முதல் தேதி மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை நோக்கி சீறும்.

கருவிகள் சோதனை
இந்த நிலையில் மங்கள்யான் விண்கலத்தில் உள்ள கருவிகள் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

மார்ஸ் கலர் கேமரா
இந்தியாவுக்கு 68000 கிலோ மீட்டர் உயரத்தில் மங்கள்யான் பறந்தபோது அதன் மார்ஸ் கலர் கேமராவில் முதல் படம் எடுக்கப்பட்டது. கடந்த நவம்பர் 19, செவ்வாய்க்கிழமை இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஹெலனை கிளிக் செய்தது
ஆந்திரக் கரையோரம் நிலைகொண்டுள்ள "ஹெலன்' புயலை மங்கள்யான் விண்கலம் தெளிவாகப் படம்பிடித்து அனுப்பியுள்ளது.

ஆப்பிரிக்காவும் தெரிகிறது
இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தை இஸ்ரோ நேற்றுதான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

செக்கிங் போட்டோ
மங்கள்யான் விண்கலத்தில் உள்ள கருவிகளைச் சரிபார்க்கும் ஒரு முயற்சியாகவே இந்த கேமராவில் படங்கள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏராளமான படங்கள் எடுக்கப்பட்ட போதும் அவற்றில் ஒரு படத்தை மட்டுமே இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 1 முதல் செவ்வாயை நோக்கி நகரும்
பூமியிலிருந்து அருகில் 216 கிலோமீட்டரும், தொலைவில் 1 லட்சத்து 92 ஆயிரம் கிலோமீட்டரும் கொண்ட நீள்வட்டப்பாதையில் மங்கள்யான் விண்கலம் இப்போது சுற்றி வருகிறது. டிசம்பர் 1-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதையில் விண்கலம் செலுத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications