மணிப்பூர் காங். கமிட்டி மாநில தலைவர் ராஜினாமா! 8 எம்.எல்.ஏக்களும் கூண்டோடு பாஜகவில் இன்று ஐக்கியம்!
இம்பால்: மணிப்பூர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்தாஸ் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் 8 காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் இன்று கூண்டோடு பாஜகவில் இணைகின்றனர்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இதனால் ஆட்சியை தக்க வைப்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது.

இதேபோல் காங்கிரஸ் கட்சியும் பஞ்சாப்பில் ஆட்சியை தக்க வைக்க பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. இதனால் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமனம் செய்துள்ளார் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனிய காந்தி.
மேலும் 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. 2017-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும் பா.ஜ.க. 21 இடங்களிலும் வென்றது.
அதிக இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. ஆனால் மாநில கட்சிகளான என்.பி.எப், என்.பி.பி. ஆதரவுடன் பாஜக உடனே ஆட்சி அமைத்தது. இதன்பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைந்தனர்.
தற்போதைய நிலையில் மணிப்பூர் சட்டசபையில் பாஜகவுக்கு 25 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.
இதனிடையே அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் மணிப்பூர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்தாஸ் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் மேலும் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று கூண்டோடு பாஜகவில் ஐக்கியமாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications