பாஜக ஆளும் மணிப்பூரில் மதுவிலக்குக்கு குட்பை; மதுபான கடைகளை திறக்க அரசு முடிவு- கடும் எதிர்ப்பு!
இம்பால்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக மணிப்பூரில் அமலில் உள்ள மதுவிலக்குக்கு முடிவு கட்டுவது என ஆளும் பாஜக கூட்டணி அரசு தீர்மானித்துள்ளது. மணிப்பூரில் மதுவிலக்கு கொள்கையை பாதியளவு தளர்த்தி மதுபான கடைகளை திறக்கப் போவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் மணிப்பூரும் ஒன்று. 1991-ம் ஆண்டு முதல் மணிப்பூரில் மதுவிலக்கு அமலில் உள்ளது. கடந்த 2002-ல் சில பகுதிகளில் மட்டும் மதுவிலக்கு கொள்கை தளர்த்தப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது மணிப்பூர் மாநிலத்தில் பகுதி அளவு மதுவிலக்கு கொள்கையை தளர்த்துவது என அரசு முடிவு செய்துள்ளது. அதாவது மாவட்ட தலைநகரங்கள், சுற்றுலா தலங்கள், தங்கும் விடுதிகள் என மதுவிற்பனைக்கான சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பைரேன் சிங் அறிவித்துள்ளார்.
ஆனால் மணிப்பூரில் பூரணமதுவிலக்கைத்தான் அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் இப்போதே போராட்டத்தில் குதித்துவிட்டன. இம்பால் கிழக்குப் பகுதியில் நேற்று பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி போராட்டங்கள் நடைபெற்றன.
இது தொடர்பாக மாநில முதல்வர் பைரேன்சிங் கூறுகையில், மணிப்பூரில் மதுவிலக்கு கொள்கை தளர்வு தொடர்பான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதன் மூலம் மாநில அரசுக்கு ரூ600 கோடி வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சட்டவிரோத மதுவிற்பனை, கள்ளச்சாராயம் ஆகியவை கடுமையாக ஒடுக்கப்படும் என்றார்.
மணிப்பூரைப் பொறுத்தவரை 1970களில் இருந்தே மதுவிலக்குக்கு கொள்கைக்கான போராட்டங்கள் நடைபெற்று வருக்கின்றன. இதன்விளைவாகத்தான் 1991-ம் ஆண்டு மணிப்பூரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. தற்போதும் மணிப்பூரில் மதுவிலக்கு அமலில் உள்ளது.