மணிப்பூர் முதல்வர் மீது தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
உக்ருல்: மணிப்பூர் முதல்வர் இபோபி மீது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஆனால் இத்தாக்குதலில் இருந்து அவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இதனால் மணிப்பூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியின் இபோபி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் நாகா இனமக்கள் வசிக்கும் பகுதிகளை நாகாலாந்துடன் இணைக்க வேண்டும் என்பது அகன்ற நாகாலாந்து கோரும் தீவிரவாதிகளின் கோரிக்கை. இதனால் மணிப்பூரில் தொடர் தாக்குதல்களை நாகா தீவிரவாதிகள் நடத்தி வருகின்றனர்.

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் முதல்வர் இபோபி இன்று மாவட்ட தலைமையகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு நாகா தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு ஜவான் படுகாயமடைந்தார்.
இதனிடையே உக்ருல் நகருக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய இபோபி மீது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காயங்கள் ஏதுமின்றி முதல்வர் இபோபி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வர் இபோபி மீதான தாக்குதலுக்கு நாகாலாந்து தனிநாடு கோரும் தீவிரவாதிகளே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications