திடீரென குலுங்கிய பூமி.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி.. ரிக்டரில் 3.8 ஆக பதிவு
இம்பால்: மணிப்பூர் மாநிலம் மொய்ராங்க் பகுதியில் இன்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துருக்கி, சிரியாவில் கடந்த மாதம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் தற்போது தொடர்ந்து இந்தியா உள்பட பல நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் என்பது ஏற்பட்டு வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் மலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.5 என பதிவாகி இருந்தது.

பல நாடுகளில் உணரப்பட்ட நிலநடுக்கம்
மேலும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பல நாடுகளில் உணரப்பட்டது. பாகிஸ்தானில் அன்றைய தினம் இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர் உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்லாமாபாத் பகுதியில் 7.7 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. மேலும் சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 15க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

அதிர்ந்துபோன வடமாநிலங்கள்
இந்தியாவை பொறுத்தமட்டில் தலைநகர் டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், காஷ்மீர், ஹரியானா உள்பட பல வடமாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லியில் நிலநடுக்கத்தை மக்கள் நன்றாகவே உணர்ந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 2.3 என நிலநடுக்கம் பதிவானது.

மணிப்பூரில் இன்று நிலநடுக்கம்
இந்நிலையில் தான் இன்று மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது மணிப்பூர் மாநிலம் மொய்ராங்க் பகுதியில் இன்று மாலை 6.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சில வினாடிகள் இந்த நிலநடுக்கம் நீடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பலி, பாதிப்பு பற்றிய விபரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

உறுதி செய்த தேசிய மையம்
மேலும் மணிப்பூர் மாநிலம் மொய்ராங்க் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை நிலஅதிர்வுகளை பதிவு செய்யும் தேசிய மையம் உறுதி செய்துள்ளது. அதன்படி மணிப்பூர் மாநிலம் மொய்ராங்க பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மொய்ராங்க் பகுதியில் இருந்து கிழக்கு தென்கிழக்காக 67 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிலை கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications