கட்டுக்கடங்காத வன்முறை.. பதற்றம் நிறைந்த மாநிலமாக மணிப்பூர் அறிவிப்பு
இம்பால்: மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் வன்முறை கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், அம்மாநிலம் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மைத்தேயி இன மக்களை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ஏற்பட்ட மோதலால் அந்த மாநிலத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. கொடூரத்தின் உச்சமாக குக்கி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்தது.

நாடாளுமன்றமும் இந்த விவகாரத்தால் முடங்கியது. மணிப்பூரில் நிலவும் பதற்றமான சூழலை கட்டுப்படுத்த அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படன. இதனால், மணிப்பூர் போலீசார், மத்திய படை போலீசார், ராணுவம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இருந்தாலும் கூட வன்முறை மட்டும் நிற்கவே இல்லை. இதனால் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறி பிற இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மணிப்பூரில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்ப தொடங்கியதையடுத்து அங்கு மொபைல் இண்டரெநெட் சேவைக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இந்தநிலையில் மைத்தேயி இனத்தை சேர்ந்த 2 மாணவர்கள் குக்கி இனத்தை சேர்ந்தவர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தலைநகர் இம்பாலை சேர்ந்த பிஜாம் ஹேமன்ஜித் (வயது 20) ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி (17) ஆகிய இருவரும் கடந்த ஜூலை 6-ந்தேதி குக்கி இனத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களை தேடி வந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையில் பிஜாம் ஹேமன்ஜித் மற்றும் ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி ஆகிய இருவரும் ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் வெளியாகி அதிரவைத்தது.
சிறிது நேரத்தில் அவர்கள் கொலை செய்யப்பட்டு சடலாமக கிடக்கும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகின. அவர்களின் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தை கண்டித்தும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.
நேற்று நடைபெற்ற பேரணியில் பல இடங்களில் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்கள் 45 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால், மணிப்பூர் மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அம்மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது. 19 காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளை பதற்றம் நிறைந்த மாவட்டமாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அப்சா சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.











Click it and Unblock the Notifications