''ஞாயிற்றுக்கிழமை தேர்தல் வைக்காதீங்க..'' கோரிக்கை வைக்கும் மணிப்பூர் பழங்குடியினர்.. ஏன் தெரியுமா?
இம்பால்: மணிப்பூரில் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என மணிப்பூர் பழங்குடியின அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் என ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மணிப்பூரில் 60 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இங்கு பிப்ரவரி 27, மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலையடுத்து மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ், நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, இடதுசாரி முன்னணி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பலமுனைப் போட்டியில் களமிறங்கவுள்ளன. மணிப்பூரில் தற்போது பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது.

பா.ஜ.க
2017ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் இடத்தை பிடித்தது பா.ஜ.க. ஆனாலும், பெரும்பான்மை பெறும் வகையில் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. மணிப்பூர் முதல்வரானார் பைரோன் சிங். மணிப்பூர் மாநில வரலாற்றில் முதல்முறை பாஜக இப்போதுதான் ஆட்சியை பிடித்தது.

தேர்தல்
மணிப்பூரில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 27-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேதியை மாற்ற வேண்டும் என தற்போது கோரிக்கை எழுந்துள்ளது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கிறிஸ்துவர்களின் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்க வாய்ப்பு ஏற்படும் என கோரிக்கை எழுகிறது.

பழங்குடியினர்
மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு ரிசர்வ் தொகுதியாக 20 தொகுதிள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் கிறிஸ்துவர்கள் வசித்து வருகின்றனர். முதல்கட்ட தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று பழங்குடியின அமைப்புகள் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளன.

ஓய்வு நாள்
எங்கள் மாநிலத்தின் மக்கள்தொகையில் 43 சதவீதம் பழங்குடியின மக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை என்பது புனித நாளாகும். எனவே தேவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வர். மேலும் ஓய்வு எடுக்கவும் பயன்படுத்திக் கொள்வர்.

ஞாயிறு வேண்டாம்
இதனை கருத்தில் கொண்டு முதல்கட்ட தேதியை மட்டும் மாற்ற வேண்டும். வேறு எந்த தேதியில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் வேண்டாம் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறது மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர்கள் சங்கம் மற்றும் கிகி இன்பி சங்கம்.












Click it and Unblock the Notifications