மணிப்பூரில் 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை கட்.. பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!
இம்பால்: மணிப்பூரில் தற்போது குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கையை மீறி செல்வதாகவும், இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று, அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது. மட்டுமல்லாது பிஷ்ணுபூர் மாவட்டத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்த அம்மாநில காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில், "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை சமாளிக்க இணையதள மற்றும் மொபைல் டேட்டா, வி.எஸ்.ஏ.டி மற்றும் வி.பி.என் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த தடை ஜூன் 7-ம் தேதி இரவு 11:45 மணி முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு அமலில் இருக்கும்.

சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. இதனால் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபால், காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் எழுந்திருக்கிறது. எனவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இம்பால் மேற்கு
இம்பால் கிழக்கு
தௌபால்
காக்சிங்
ஆகிய மாவட்டங்களில் 4 பேருக்கு அதிகமாக ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. பிஷ்ணுபூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். நிச்சயம் இந்த உத்தரவுகள் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்யவே நாங்கள் இதை செய்திருக்கிறோம். எனவே முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
காவல்துறை இப்படியான உத்தரவை பிறப்பிக்க காரணம் இருக்கிறது. அதாவது மெய்தேய் சமூகத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நேற்றிரவு சோஷியல் மீடியாக்களில் தகவல்கள் பரவின. இதனையடுத்து போராட்டம் தீவிரமடைந்தது. சாலைகளில் மரங்கள் வெட்டி குறுக்கே போடப்பட்டிருக்கிறது. டயர்கள் கொளுத்தப்பட்டிருக்கின்றன. இதனால்தான் தற்போது காவல்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications