ஓயாத கலவரம்.. ஜூலை 8 வரை பள்ளிகள் விடுமுறை.. மணிப்பூர் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
இம்பால்: மணிப்பூர் கலவரத்தால் அசாதாரண சூழல் நிலவி வருவதை ஒட்டி மணிப்பூரில் உள்ள பள்ளிகளுக்கு ஜூலை 8ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் அது இரு சமூகத்தினர் இடையே கலவரமாக உருவெடுத்து 50 நாட்களை கடந்துவிட்டது. சுமார் 120 பேர் இந்த கலவரத்தில் உயிரிழந்துள்ளனர். 3,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மைதேயி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே நடந்த வன்முறையில் ஏராளமானோரின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. மணிப்பூரைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் மிசோரம், நாகாலாந்து மாநிலங்களுக்கு அகதிகளாக சென்று விட்ட நிலையில், பலர் காடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுளள்னர். மணிப்பூரில் இன்னும் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இரு சமூகத்தினரும் ஒருவரின் வீடுகளில் ஒருவர் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ராணுவம், துணை ராணுவம், போலீசார் குவிக்கப்பட்டும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாததால் மத்திய அரசே திணறி வருகிறது.
மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக அரசும் மௌனம் சாதிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. பைரேன் சிங் செயல்படாத முதல்வராக இருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்து, அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் மணிப்பூருக்குச் சென்றார். அவர் தனது பயணத்தின் போது இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள், குழந்தைகளுடன் உரையாடினார்.
இதற்கிடையே, மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக, கடந்த மாதம் 3ஆம் தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மணிப்பூரில் ஜூலை 5ஆம் தேதி வரை இணையதள சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மணிப்பூரில் ஜூலை 8ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நீடித்து வரும் கலவரத்தைக் கருத்தில் கொண்டு, வன்முறைச் சம்பவங்களில் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications