மணிப்பூர் வன்முறை: 3 பெண் நீதிபதிகள் குழு- வெளி மாநில அதிகாரிகள் விசாரணை- உச்சநீதிமன்றம்!
டெல்லி: இனவன்முறைகளால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை பார்வையிட உயர்நீதிமன்ற 3 முன்னாள் பெண் நீதிபதிகள் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்றும் விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது மணிப்பூர் மாநில டிஜிபி ரவீந்தர் சிங் நேரில் ஆஜராகி இருந்தார்.

இன்று உச்சநீதிமன்ற விசாரணையின் போது மணிப்பூர் மாநிலா அரசால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்: மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக மொத்தம் 12 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த 12 முதல் தகவல் அறிக்கைகள் மீது சிபிஐ விசாரணை நடத்தும்.
மேலும் 8 சிறப்பு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு இதர முதல் தகவல் அறிக்கைகள் மீது விசாரணை நடத்தும். இந்த சிறப்பு விசாரணை குழுக்களுக்கு எஸ்.பி அளவிலான அதிகாரிகள் தலைமை வகிப்பர். சிறப்பு விசாரணை குழுக்கள் விசாரணையை துணை டிஐஜி கண்காணிப்பார். மணிப்பூர் மாநில டிஜிபி சிறப்பு விசாரணை குழுக்களின் விசாரணை முன்னேற்றத்தை கண்காணிப்பார். இவ்வாறு மணிப்பூர் அரசு தெரிவித்தது.
இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுகள்:
- மணிப்பூர் மாநிலத்தில் விசாரணைகளுக்கு அப்பால் நிவாரணம் உள்ளிட்டவைகளை கண்காணிக்க 3 முன்னாள் உயர்நீதிமன்ற பெண் நீதிபதிகளைக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
- ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆஷா மேனன், ஷாலினி பி ஜோஷி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
- மணிப்பூரில் சிபிஐ விசாரணை நடத்தும் குழுவில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெறுவர்.
- மணிப்பூர் சம்பவங்கள் தொடர்பான சிபிஐ விசாரணையை ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கண்காணிப்பார்.
- தேசிய பாதுகாப்பு முன்னாள் துணை ஆலோசகரும் மகாராஷ்டிரா முன்னாள் டிஜிபியுமான Dattatray Padsalgikar மணிப்பூர் சிபிஐ விசாரணைகளை கண்காணிப்பார்.
- சிறப்பு புலனாய்வு குழுக்கள் விசாரணையை வெளிமாநிலத்தைச் சேர்ந்த டிஐஜி நிலை அதிகாரிகள் மேற்பார்வையிடுவர்.












Click it and Unblock the Notifications