மும்பையில் பட்டப்பகலில் மணிப்பூர் பெண் மானபங்கம்: வழக்குப்பதிவு செய்ய மறுத்த போலீஸ்
மும்பை: மும்பையில் பட்டப்பகலில் மணிப்பூரை சேர்ந்த இளம்பெண்ணை தாக்கி மானப்பங்கப்படுத்திய நபர் மீது மீடியா தலையிட்ட பிறகே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக மும்பையில் தங்கி மேக்கப் கலைஞராக பணியாற்றி வருகிறார். அவர் கடந்த சனிக்கிழமை மதியம் தோழி ஒருவருடன் கலினா பகுதி வழியாக சென்றுள்ளார்.
பாம் வில்லா சொசைட்டி பகுதியை தாண்டி செல்கையில் ஒருவர் மேக்கப் கலைஞர் பெண் மீது எச்சில் துப்பியுள்ளார். இதை அவர் எதிர்த்து கேட்டபோது அந்த நபர் அவரை வயிற்றில் எட்டி உதைத்து அவரின் உடைகளை கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளார்.
ஆள்நடமாட்டம் அதிகமாக இருக்கும் அந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த சம்பவத்தை ஒருவர் கூட தட்டிக் கேட்கவில்லை. நடுத்தெருவில் அசிங்கப்படுத்தப்பட்ட அந்த பெண் நேராக காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி புகார் அளிக்க அவர்களோ வழக்குப்பதிவு செய்ய மறுத்து அவரை விரட்டிவிட்டனர்.
இந்த தகவல் மீடியாக்களுக்கு தெரிய வந்து பெரிதான பிறகே போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகிறார்கள்.