சோனியாவுக்கு எந்த ஒரு பைலையும் அனுப்பவில்லை: நட்வர் சிங் புகாருக்கு மன்மோகன் சிங் பதில்
டெல்லி: காங்கிரஸ் தலைவருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் கூறிய புகாரை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறுத்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் தமது சுயசரிதை புத்தகத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா 2004ஆம் ஆண்டு பிரதமர் பதவி ஏற்பதை அவரது மகன் ராகுல் தடுத்ததாக புகார் கூறியிருந்தார். இது குறித்து பதிலளித்துள்ள சோனியா, தாம் ஒரு புத்தகம் எழுதுகிறேன்.. அதில் உண்மைகள் வெளிவரும் என்று கூறியுள்ளார்.
இதேபோல் பிரதமராக இருந்த மன்மோகன்சிங் அலுவலகத்தில் இருந்து சோனியா வீட்டுக்கு கோப்புகள் எடுத்துச் செல்லப்பட்டது உண்மைதான் என்றும் நட்வர்சிங் கூறியிருந்தார். இதனை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறுத்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்மோகன்சிங், சில தனிப்பட்ட முறையிலான உரையாடல்களை முன்வைத்து லாபமடைய நினைக்கக் கூடாது. தாம் பிரதமராக இருந்த காலத்தில் எந்த ஒரு கோப்பும் சோனியா வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்றார்.