மோடி ஆட்சியில் கருத்து சுதந்திரத்துக்கு இடமே இல்லை...: மன்மோகன்சிங் தாக்கு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்துக்கு இடமில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சாடியுள்ளார்.
ஜவஹர்லால் நேருவின் 125-வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தை டெல்லி ஜவஹர் பவனில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் மன்மோகன்சிங் பேசியதாவது:

மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளித்தல், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை ஆகியவைதான் ஒரு குடியரசை உயிர்ப்புத் தன்மையுடன் வைக்க உதவுகின்றன. ஆனால் நம் நாட்டில் சிந்தனையாளர்களைக் குறிவைத்து சிலர் தாக்குதல் நடத்துகின்றனர்.
இவை கருத்துச் சுதந்திரம், மத நம்பிக்கைகளின் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவை மீதான தாக்குதல்களாக இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக கருத்துச் சுதந்திரமே இல்லாத நிலை நிலவுகிறது.
மாற்றுக் கருத்துகளைக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், குறிப்பிட்ட உணவை உண்போர், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தோர் உள்ளிட்டோரைக் கொலை செய்தல் அல்லது தாக்குதல் நடத்தும் சகிப்பின்மை செயல்களை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது. இத்தாக்குதல்களை சிந்தனையாளர்கள் அனைவரும் தேசத்தின் மீதான தாக்குதல் எனக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
மாற்றுக் கருத்து கொண்டிருப்போரையும் சுதந்திரமான பேச்சுரிமையையும் அடக்கும் போக்கு நமது பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்.
இவ்வாறு மன்மோகன்சிங் பேசினார்.
பாஜக எதிர்ப்பு
இதனிடையே மன்மோகன் சிங்கின் இந்த கருத்து குறித்து பாஜக செயலாளர் ஸ்ரீ காந்த் சர்மா கூறுகையில், தாத்ரி, கல்பர்கி படுகொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்களுக்கும் மத்திய அரசுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. சகிப்பின்மை செயல்களுக்கு மோடி அரசைக் குற்றம்சாட்டி காங்கிரஸ் முன்வைக்கும் விமர்சனத்தை ஏற்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications