ஏ.என்.32 விமானம் மாயமானதற்கு சதிச் செயல் எதுவுமில்லை - மனோகர் பாரிக்கர்
டெல்லி: சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமானுக்கு 29 பேருடன் சென்ற விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.32 விமானம் மாயமானதற்கு சதிச் செயல் எதுவும் காரணமாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என மத்திய பாதுகாப்பு துறை மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
மாயமான விமானத்தை தேடும் பணியில் விமானப்படை விமானங்கள்,ஹெலிகாப்டர்கள், கடற்படை, கடலோர காவல்படை கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. ஒரு வாரத்திற்கு மேலாக விமானத்தை தேடியும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று ஆந்திர பிரதேச மாநில மறுகட்டமைப்புத் தொடர்பான மசோதா குறித்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திமுக உறுப்பினர் திருச்சி சிவா விமானப் படை விமானம் ஏ.என்.32 மாயமானது குறித்து பிரச்சனை எழுப்பினார்.
மேலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்க ஏற்கனவே உறுதி அளித்தபடி அவைக்கு வரவில்லை என்றும், அவர் குற்றம்சாட்டினார். இதையடுத்து மாநிலங்களவைக்கு வந்து விளக்கம் அளித்த மனோகர் பாரிக்கர், மாயமான விமானத்தை தேடும் பணியை நானே நேரிடையாக கண்காணித்து வருகிறேன்.
விமானத்தில் இருந்த 29 பேரின் குடும்பத்தினருக்கு தேடுதல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் தகவல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் அவர்களை தொடர்பு கொண்டு கொண்டு தேவையான உதவிகள் செய்து வருவதாகவும் பாரிக்கர் தெரிவித்தார்.
மாயமான விமானம் காலாவதியானது என்கிற குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார். நாசவேலை காரணமாக விமானம் மாயமாகி இருப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று மனோகர் பாரிக்கர் விளக்கம் அளித்தார்.