மத்திய அமைச்சர் பாரிகர் உள்பட 10 பேர் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு
லக்னோ: பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிகர் உள்பட 10 பேர் உத்தர பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிகர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மோடி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தபோது பாரிகருக்கு பாதுகாப்புத் துறையை அளித்தார். பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பாரிகர் உத்தர பிரதேசத்தில் காலியாக இருந்த ராஜ்யசபா பதவிக்கு போட்டியிட்டார்.
உத்தர பிரதேசத்தில் காலியாக இருந்த 10 ராஜ்யசபா எம்.பி. பதவிக்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பாரிகர், சமாஜ்வாடி கட்சியின் ராம் கோபால் யாதவ், மாநில அமைச்சர் ஆசம் கானின் மனைவி தஸீன் பாத்திமா, முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர், ரவி பிரகாஷ் வர்மா, ஜாவித் அலி கான், சந்திரபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் ராஜாராம், வீர் சிங், காங்கிரஸைச் சேர்ந்த பி.எல். பூனியா ஆகியோர் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் ஆளும் சமாஜ்வாடி கட்சிக்கு 6 சீட்கள், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 , காங்கிரஸ், பாஜகவுக்கு தலா ஒரு சீட்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளரான பூனியாவுக்கு சமாஜ்வாடி கட்சி ஆதரவு அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.