மாவோயிஸ்டுகளின் மாவீரர்கள் வாரம்... ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடக்கம்
மல்காங்கிரி: மாவோயிஸ்டுகளின் மாவீரர்கள் வாரம் தொடங்கியதை முன்னிட்டு ஒடிஷா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. படையினர் மீது தாக்குதல்களை மாவோயிஸ்டுகள் நடத்தக் கூடும் என்பதால் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவோயிஸ்டுகள் தங்களது மாவீரர்கள் வாரமாக ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3-ந் தேதி வரை கடைபிடிக்கின்றனர். இதையடுத்து ஒடிஷாவின் மல்காங்கிரி, ராயகடா பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து போக்குவரத்து முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த வார காலப் பகுதியில் மாவோயிஸ்டுகள் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பார்கள் என்பதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஒடிஷா, சத்தீஸ்கர் மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. எல்லைப் பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாவீரர்கள் வாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதியில் சிவப்புநிற போஸ்டர்களை ஒட்டியுள்ளனர் மாவோயிஸ்டுகள். மாவீரர்கள் வாரத்துக்கு முன்னரும் பின்னரும் படையினர் மீது தாக்குதல்களை மேற்கொள்வதை மாவோயிஸ்டுகள் வழக்கமாக வைத்துள்ளனர்.
இதனால் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.