சத்தீஸ்கரில் திடுதிப்பென தலை தூக்கும் மாவோயிஸ்டுகள்- என்கவுண்ட்டரில் 3 நக்சல்கள் சுட்டுக் கொலை!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்தடுத்து மாவோயிஸ்டுகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தண்டேவடா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 3 மாவோயிஸ்டுகள் (நக்சல்கள், நக்சலைட்டுகள்) சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் முயற்சித்தனர். ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் பலத்த பாதுகாப்புடன், அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் முடிந்தது. சத்தீஸ்கரில் தற்போது பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம் மீண்டும் தலை தூக்க தொடங்கி உள்ளது. சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதில் சிஆர்பிஎப் ஜவான் ஒருவர் கடந்த வாரம் வீரமரணம் அடைந்தார். இதில் சிபிஆர்எப் வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் ஆசிர்குடா பகுதியில் பயணிகள் பேருந்து உள்ளிட்டவைகளுக்கு சில நாட்களுக்கு முன்னர் மாவோயிஸ்டுகள் தீ வைத்து எரித்தனர். இதனைத் தொடர்ந்து சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதில் 8 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவடா வனப் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. தண்டேவடா- சுக்மா எல்லையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் தரப்பில் பதிலடி தரப்பட்டது. இந்த மோதலில் 3 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதனைட் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தண்டேவடா, சுக்மாவில் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சத்தீஸ்கரில் புதிய பாஜக ஆட்சி அமைந்தது முதல் மாவோயிஸ்டுகள் மீண்டும் தலை தூக்க தொடங்கி இருக்கின்றனர். இதனிடையே சத்தீஸ்கரில் நிலக்கரி சுரங்கம் அமைக்க 30,000 மரங்கள் வெட்டுவதற்கு எதிராக பழங்குடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதானி குழுமத்தின் நிலக்கரி சுரங்கத்துக்கு எதிரான போராட்டத்தை மாவோயிஸ்டுகள் தூண்டிவிட்டு நடத்துகின்றனரா? என்கிற கோணத்திலும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications