ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு- ஒடிஷாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்!
ராயகடா: அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒடிஷாவில் மாவோயிஸ்டுகள் ரயில்வே தண்டவாளத்தைத் தகர்த்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருகை தருகிறார். ஒபாமாவின் இந்திய வருகைக்கு நாடு முழுவதும் இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஒடிஷாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள முனிகுடா- முனிகோல் இடையே ரயில் தண்டவாளத்தில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று காலை நேரத்தில் நடைபெற்ற இத்தாக்குதலில் ரயில்வே ஊழியர் ஹரி மித்ரா என்பவர் காயமடைந்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சக்தி குறைந்த குண்டு வெடித்தது தெரியவந்தது. இந்த தாக்குதலில் விசாகப்பட்டினம்-ராய்ப்பூர் இடையிலான ரயில் பாதையில் ஒரு மீட்டர் அளவிற்கு தண்டவாளம் தகர்ந்துள்ளது.
இதனால், அப்பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கெசிங்கா, முனிகுடா, ராஜ்யகடா ரெயில் நிலையங்களில் ரயில்கள் காத்திருக்கின்றன.
சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பதாகையில் எழுதியிருந்த தகவலின்படி, வன்சதரா-நாகபல்லி மற்றும் குமுசர் பகுதியில் உள்ள தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தினர் தான் தாக்குதலுக்கு காரணமென்றும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவமானது சி.ஆர்.பி.எப். முகாமிலிருந்து 100 மீட்டர் தொலைவில்தான் நிகழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.