"விஷத்தை" ஆயுதமாக கையிலெடுக்கும் மாவோயிஸ்டுகள்- அதிர்ச்சியில் பாதுகாப்புப் படை!
பாட்னா: ஆயுதங்களை விட தற்போது 'விஷத்தை' பயன்படுத்துவதில் மாவோயிஸ்டுகள் முனைப்பு காட்டுவதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருப்பது பாதுகாப்புப் படையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இது குறித்து பீகார் காவல்துறை அதிகாரி சஞ்சய்சிங் கூறியிருப்பதாவது:
பீகாரின் ஜமூய், முங்கெர், பங்கா மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் வலுவாக உள்ளனர். இந்த மாவட்டங்கள் அடர்ந்த வனப்பகுதி நிறைந்ததாகும்.
இந்த வனப்பகுதியில் "பீலா" என்ற கொடிய தாவரம் உள்ளது. இந்த தாவரத்தில் இருந்து விஷத்தை மாவோயிஸ்டுகள் பிரித்தெடுக்கின்றராம். அதில் சுண்ணாம்பையும் கலந்து சாப்பாட்டு பொருட்களில் கலந்து பாதுகாப்புப் படையினருக்கு பொதுமக்கள் மூலம் கொடுத்தனுப்புகிற யுக்தியை மாவோயிஸ்டுகள் கையாளத் தொடங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதனால் மாவோயிஸ்டுகள் பகுதிகளில் அறிமுகமற்ற நபர்கள் கொடுக்கும் எந்த ஒரு உணவுப் பொருளையும் வாங்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
இதேபோல் காவல்துறையினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சஞ்சய்சிங் கூறினார்.