மங்கள்யான்: செவ்வாய் கிரகத்தை ஆராய புறப்படுகிறது
டெல்லி: மங்கள்யான் விண்கலத்தை பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகம் நோக்கி புறப்பட வைக்கும் முக்கிய பணி இன்று நடத்தப்பட உள்ளது. இன்றிரவு 12.49 மணிக்கு இந்த முக்கிய நகர்த்தலை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்ய உள்ளனர்.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம், கடந்த 5-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
பி.எஸ்.எல்.வி.-25 என்னும் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட மங்கள்யான் பூமியின் சுற்று வட்டப்பாதையில் முதலில் நிலை நிறுத்தப்பட்டது. பிறகு ராக்கெட்டில் உள்ள எரிபொருளை எரித்து மங்கள்யானின் புவி சுற்று வட்டப்பாதை சிறிது சிறிதாக அதிகரிக்கப்பட்டது.

முதலில் பூமியின் 23,566 கிலோ மீட்டர்கள் கொண்ட நீள்வட்ட சுற்று வட்டப்பாதையில் மங்கள்யான் சுற்றி வந்தது. 5 தடவை அதன் நீள்வட்ட சுற்றுப்பாதை அதிகரிக்கப்பட்டது.
2 லட்சம் கிலோ மீட்டர்
கடைசியாக 16-ந்தேதி நடத்தப்பட்ட நீள்வட்ட சுற்றுப்பாதை அதிகரிப்பு காரணமாக மங்கள்யான் சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர்கள் தூரத்தில் நீள் வட்ட சுற்றுப்பாதைக்கு சென்றது.
கடந்த 2 வாரங்களாக மங்கள்யான் விண்கலம் 2 லட்சம் கி.மீ. கொண்ட நீள்வட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது. 11ம் தேதி மட்டும் அதில் சிறு எந்திர கோளாறு ஏற்பட்டது. அது சரி செய்யப்பட்ட பிறகு மங்கள்யான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஹெலனை படமெடுத்தது
வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஹெலன் புயலை மிகத் துல்லியமாக படம் எடுத்து மங்கள்யான் அனுப்பியது. இந்த நிலையில் மங்கள்யான் விண்கலத்தை பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகம் நோக்கி புறப்பட வைக்கும் முக்கிய பணி இன்று நடத்தப்பட உள்ளது. இன்றிரவு 12.49 மணிக்கு இந்த முக்கிய நகர்த்தலை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்ய உள்ளனர்.
விடுபடும் மங்கள்யான்
பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருந்து மங்கள்யான் புறப்பட்டுச் செல்வதற்காக சுமார் 200 கிலோ எடை கொண்ட எரிபொருளை இஸ்ரோ விஞ்ஞானிகள் எரிக்க செய்வார்கள். அந்த எரிபொருள் சுமார் 1300 வினாடி நேரம் எரியும்.
அது கொடுக்கும் உந்து சக்தியில் மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை நோக்கி தன் பயணத்தை இன்றிரவு தொடங்கும்.
செவ்வாயை நோக்கி
சுமார் 300 நாட்கள் மங்கள்யான் பயணம் செய்து அடுத்த ஆண்டு (2014) செப்டம்பர் மாதம் 24-ந்தேதி செவ்வாய் கிரகத்தை நெருங்கும். பிறகு செவ்வாய் கிரகத்தில் இருந்து 366 கி.மீ. X 80,000 கி.மீ. தொலைவில் மங்கள்யான் நிலை நிறத்தப்படும்.
அந்த நீள்வட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வந்தபடி செவ்வாய் கிரகத்தை மங்கள்யான் ஆய்வு செய்யும். சுமார் 6 மாதம் மட்டுமே மங்கள்யான் செவ்வாயை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்று கூறப்படுகிறது.
காற்று மண்டலம்
மார்கல் எக்சோபெரிக் நியூட்டரல் காம்போசிசன் அனலைசர் என்ற கருவி செவ்வாயில் உள்ள துகள்கள் பற்றிய ஆய்வை நடத்தும். லைமன் ஆல்பா ஒளிமானி மீத்தேன் சென்சார் கருவி இரண்டும் செவ்வாயின் காற்று மண்டலத்தை ஆய்வு செய்யும். மார்ஸ் கலர் கேமரா, சிவப்புகதிர் ஸ்பெக்ட்ரோ மீட்டர் ஆகிய இரு கருவிகளும் செவ்வாய் கிரகத்தின் மேற்புறத்தில் உள்ள படிமங்கள் குறித்து ஆய்வு செய்யும்.
60 தடவை சுற்றும்
மங்கள்யான் விண்கலம் அதிகபட்சமாக 60 தடவையே செவ்வாய் கிரகத்தை சுற்றிவரும் என்று தெரிகிறது. இந்த குறுகிய கால ஆய்வு மூலம் ஏராளமான புதிய தகவல்களை இந்திய விஞ்ஞானிகள் பெறுவார்கள் என்று உலகமே எதிர்பார்க்கிறது.












Click it and Unblock the Notifications