குஜராத்தில் விளையாட்டு திடலில் பயங்கர தீ விபத்து.. 9 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்த சோகம்
ராஜ்கோட்: குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு திடலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள வணிக வளாகப் பகுதியில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி விளையாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள தற்காலிக அமைப்பு ஒன்றில் இன்று மாலை 5 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியே புகை மண்டலம் ஆனது

24 பேர் பலி: இதில், விளையாட்டு திடலில் இருந்த பலரும் தீ விபத்தில் சிக்கினர். பலரும் குடும்பத்தோடு வந்திருந்ததால், குழந்தைகள், பெண்களும் தீ விபத்தில் சிக்கி மரண ஓலமிட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. தீ விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
பிரதமர் மோடி இரங்கல்: ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க குஜராத் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பூபேந்திர படேல்: "ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்து மிகுந்த வேதனையை தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். பாதிக்கபட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளூர் நிர்வாகம் முழு வீச்சில் பணியாற்றி வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கூறியிருப்பதாவது:- "காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
வழக்குப்பதிவு செய்யப்படும்: விளையாட்டு திடலில் எரிந்த தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது வரை 24 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. சோலன்கி பகுதியை சேர்ந்த யுவராஜ் சிங் என்பவருக்கு சொந்தமானது இந்த விளையாட்டு திடல். அலட்சியமாக செயல்பட்டு உயிர் சேதத்தை ஏற்படுத்திய பிரிவில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம்: தீ விபத்துக்கான காரணம் தற்போது வரை கண்டுபிடிக்கவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் தீ விபத்திற்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். தீ விபத்து ஏற்பட்ட விளையாட்டு திடலுக்கு பாஜகவின் உள்ளூர் தலைவரும் எம்.எல்.ஏவுமன தர்ஷ்தித் ஷா சென்றார். அங்கு மீட்பு பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தர்ஷித் ஷா,
வரலாற்றில் முதல் முறை: "ராஜ்கோட்டில் மிகவும் சோகமான சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்து இருப்பது ராஜ்கோட் வரலாற்றில் இது முதல் முறையான சோக நிகழ்வு ஆகும். இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கைஎடுக்கும். தற்போதைக்கு மீட்பு பணியில் தான் அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications