உலகிலேயே செல்ஃபி மரணத்தில் இந்தியா தான் முதலிடம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டெல்லி: உலகிலேயே செல்ஃபி எடுக்கச் சென்று உயிரிழப்போரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் அண்மைக்காலமாக, செல்ஃபி எடுத்துக் கொள்ளும் மோகம் வேகமாக பரவி வருகிறது. ஒருபுறம் செல்ஃபி மகிழ்ச்சியை தந்தாலும் மற்றொரு புறம் சோகத்தையும் தந்து விடுகிறது.

சமூக வலைத்தளங்களில் வெளியிடும் செல்பி புகைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்புக்காக ஆபத்தான இடங்களில், பாதுகாப்பற்ற முறையில் செல்பி எடுக்கும் பழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. அதேநேரம் செல்ஃபி எடுக்கச் சென்று உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் சமீப காலமாக, செல்ஃபியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும், உலகிலேயே இந்தியாவில் தான் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கார்னிகியா மெல்லன் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி இந்திரபிரஷ்தா இன்ஸ்டிட்யூட் ஆப் இன்பர்மேஷன் ஆகியன இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2014 -ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியாவில்தான் அதிக அளவில் செல்ஃபி மரணங்கள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 76 பேர் இந்தியாவில் மரணமடைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவை தொடர்ந்து ரஷ்யா 2-வது இடத்திலும், அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் சீனா கடைசி இடத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications