மேகாலயா ஆளுநராக தமிழக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சண்முகநாதன் பொறுப்பேற்றார்!
ஷில்லாங்: மேகாலயா ஆளுநராக தமிழக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சண்முகநாதன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேகாலய ஆளுநராக இருந்த கிருஷண்காந்த் பால், உத்தர்காண்ட் ஆளுநராக கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். அதையடுத்து மேற்கு வங்க மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி கூடுதல் பொறுப்பாக மேகாலய மாநிலத்தையும் கவனித்து வந்தார்.
இந்நிலையில் சண்முகநாதன் கடந்த 12-ந் தேதி மேகாலய ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஷில்லாங்கில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று அவர் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மேகாலய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உமாநாத் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதையடுத்து முதல்வர் முகுல் சங்மா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் சண்முகநாதனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். தமிழக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் நீண்டகாலம் பணியாற்றிய சண்முகநாதன் மாநில அமைப்பாளராகவும் இருந்தார். பின்னர் பாரதிய ஜனதாவிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தவர் சண்முகநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.