மேகாலயாவில் 14 வயது சிறுமி பலாத்காரம்.. தலைமறைவாக இருந்த எம்.எல்.ஏ அசாமில் கைது
மேகாலாயாவில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட சுயேட்சை எம்.எல்.ஏ. அசாம் மாநிலத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.
கவுகாத்தி: மேகாலாயா மாநிலத்தில் கடந்த மாதம், மூத்த காங்கிரஸ் தலைவரும் அம்மாநில உள்துறை அமைச்சருமான லிங்டோ என்பவரின் மகனுக்கு சொந்தமான சொகுசு இல்லத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இதில் தொடர்புடைய அமைச்சரின் மகன் 4 பெண்கள் உள்பட எட்டுபேரை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, தன்னை சீரழித்ததாக சில நபர்களின் பெயர்களை போலீசாரிடம் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அம்மாநில சுயேட்சை எம்.எல்.ஏ ஜூலியஸ் தோர்பங்க் என்பவரை மாநிலத்தின் பல பகுதிகளில் போலீசார் தனிப்படை அமைத்து, வலை வீசி தேடி வந்தனர்.
மேலும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஜூலியஸ் தோர்பங் அசாம் மாநிலம் கவுகாத்தியில் தலைமறைவாக பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அசாம் மாநிலத்துக்கு விரைந்த போலீஸ் தனிப்படையினர், அங்கு ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த ஜுலியஸ் தோர்பங்கை கைது செய்தனர்.
தற்போது கைதாகியுள்ள சுயேட்சை எம்.எல்.ஏ ஜூலியஸ் தோர்பங், இதற்கு முன்னர் ஆயுதம் தாங்கிய தீவிரவாத அமைப்பின் துணை அமைப்பாளராக இருந்து, கடந்த 2007ஆம் ஆண்டு அரசிடம் சரணடைந்தார். அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு, தேர்தலில் போட்டியிட்டு சுயேட்சை எம்எல்ஏ ஆனது குறிப்பிடத்தக்கது.