மேகதாது அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல்
டெல்லி: மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் கர்நாடக அரசு திங்கட்கிழமை பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் கர்நாடக அரசு கூறியிருப்பதாவது,
மேகதாது மற்றும் சிவசமுத்திரம் நீர் மின் திட்டம் அமைப்பது கர்நாடக அரசின் எல்லைக்கு உட்பட்டது. இதில் தலையிட தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் ராசி மணல் மற்றும் ஒகேனக்கல் மட்டுமே இரண்டு மாநிலங்களுக்கு பொதுவான பகுதிகள். இந்த இடத்தில் மட்டுமே காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் எந்த திட்டமும் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது செயல்படுத்தப்பட உள்ள மேகதாது, சிவசமுத்திரம் ஆகிய பகுதிகள் கர்நாடக மாநிலத்துக்கு உட்பட்டவை. இந்த இரண்டு இடங்களிலும் எந்த திட்டமும் செயல்படுத்தக் கூடாது என காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் எந்த உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை. இது குறித்து தமிழக அரசின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.