'தேடப்படும் குற்றவாளி' நிழல் உலக தாதா டைகர் மேமனை சந்தித்தேன்: காங். எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை
ஸ்ரீநகர்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான நிழல் உலக தாதா டைகர் மேமனை தாம் சந்தித்ததாக பயங்கரவாத இயக்கத்தைவிட்டு வெளியேறி சரணடைந்தவரும் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான உஸ்மான் மஜீத் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படுகிற குற்றவாளி டைகர் மேமன். இவரது சகோதரர் யாகூப் மேமன்தான் நேற்று முன்தினம் இந்த வழக்கில் தூக்கிலிடப்பட்டார்.
இந்த நிலையில் டைகர் மேமனை தாம் சந்தித்ததாக ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உஸ்மான் மஜீத் கூறியிருப்பது சர்ச்சையையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக உஸ்மான் மஜீத் கூறியுள்ளதாவது:
மும்பை தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 1993ஆம் ஆண்டு டைகர் மேமனைச் சந்தித்தேன். முசாஃபராபாதில் இருந்த எங்களது அலுவலகத்துக்கு அவர் வருவார்.
டைகர் எனக்கு நண்பர் கிடையாது. மாணவர்கள் விடுதலை முன்னணி அமைப்பின் நிறுவனரும், அதன் தலைவருமான ஹிலால் பேக்தான் டைகர் மேமனை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
என்னுடன் பேசியபோது மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகளை தான் நிகழ்த்தியதாக டைகர் மேமனும் ஒப்புக் கொண்டார். அதற்கான காரணத்தை அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தையும், அதன்பிறகு மூண்ட கலவரத்தையும் முக்கிய காரணமாகத் தெரிவித்தார்.
மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்துவதற்கு டைகர் மேமனுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.தான் அனைத்து உதவிகளையும் செய்தது. இந்தியாவிடம் தனது சகோதரர் யாகூப் மேமன் சரணடைந்த காரணத்தால், தன் மீது ஐ.எஸ்.ஐ. சந்தேகம் கொண்டிருப்பதாகவும், எனவே தன்னை ஐ.எஸ்.ஐ. கொலை செய்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் டைகர் மேமன் என்னிடம் பேசும்போது கவலை தெரிவித்தார்.
இவ்வாறு உஸ்மான் மஜீத் கூறியுள்ளார்.
"குக்கா பாரே" என்ற பயங்கரவாத அமைப்பில் இருந்த உஸ்மான் மஜீத், மனம் திருந்தி மத்திய அரசிடம் சரணடைந்தார். இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக மஜீத் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.