அசாமில் இன்று நிலநடுக்கம்.. ரிக்டரில் 3.7 ஆக பதிவு

இமயமலை பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டால் ஜம்மு காஷ்மீர் முதல் அருணாச்சல பிரதேசம் வரை சுமார் 8 லட்சம் பேர் பலியாகக் கூடும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் நேற்று முன்தினம் எச்சரித்திருந்தது.
குறிப்பாக வடகிழக்கு மாநிலமான மேகலாயாவின் தலைநகர் ஷில்லாங்கை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவுகோலில் 8 அலகு நிலநடுக்கம் ஏற்பட்டால் அசாம் மாநிலத்தில் மட்டும் 6 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அசாமில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7ஆக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சேத விவரங்கள் தெரியவில்லை.
கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி அன்றும் மேகலாயா தலைநகர் ஷில்லாங்கில் இதே போல் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications