காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: ராணுவ அதிகாரி உட்பட 12 பேர் பலி
கதுவா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள ஒரு ராணுவ முகாம் மற்றும் காவல் நிலையத்தை தீவிரவாதிகள் அடுத்தடுத்துத் தாக்கியதில் ஆறு போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களில் ஒருவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கதுவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், அங்கிருந்த 6 போலீசார் மற்றும் பொதுமக்களில் ஒருவர் பலியாகியுள்ளனர்.
அதேபோல், சம்பா பகுதியில் உள்ள ராணுவ முகாம் ஒன்றில் நடத்தப் பட்ட தாக்குதளில் சிக்கி காவலர் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவங்களால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தீவிரவாதிகளின் தாக்குதலை மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே உறுதி படுத்தியுள்ளார். இதுகுறித்த மேல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. சம்பந்தப்பட்ட இடத்திற்கு மற்ற ராணுவத்தினர் விரைந்துள்ளனர்.
தாக்குதலில் லெப்டினண்ட் கார்னல் ஒருவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இரு தினங்களில் அமெரிக்காவில், இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷெரீப்பும் சந்தித்து பேச உள்ள நிலையில் இத்தகைய தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்துள்ளது பதட்டத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இதில் இரண்டு தீவிரவாதிகளும் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், சம்பா ராணுவ முகாமில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்த சத்தம் கேட்டதாக சம்பா எஸ்பி தெரிவித்துள்ளார். இந்த பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து ஜம்மு-பதன்காட் நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தப்பியோடிய தீவிரவாதிகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை
ராணுவ முகாம் மீ்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கிட்டத்தட்ட 9 மணி நேரம் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் உள்ளே தாக்குதலில் ஈடுபட்டிருந்த 3 தீவிரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
தற்போது அவர்களை அடையாளம் காணும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.