ஜார்க்கண்ட் சுரங்கத்தில் பெரும் விபத்து.. பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
ஜார்கண்டில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கம் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.
ராஞ்சி : ஜார்கண்டில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டு இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்தில் பணிபுரிந்த 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று முன்தினம் 40 முதல் 50 தொழிலாளர்கள் வரை பணியில் ஈடுபட்டிருந்தனர். 70க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுரங்கத்துக்குள் நிறுத்தப்பட்டு நிலக்கரி நிரப்பப்பட்டது.
இந்நிலையில் இரவு 8.30 மணியளவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கத்தின் பெரும்பலான பகுதி இடிந்து விழுந்து மண்ணால் மூடப்பட்டது.
இதனால் சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கினர். இரவு நேரம் மற்றும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் மீட்புப் பணி துரிதப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விரைந்து சென்ற மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்கப்படும் தொழிலாளர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மருத்துவ குழுவும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.
தொழிலாளர்களை எப்படியாவது உயிரோடு மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 2 பேர் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதனால் மற்றவர்களின் கதி என்ன என்பதில் கேள்விக் குறியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 25000 ரூபாயும் வழங்கப்படும் என ஜார்கண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் இன்றும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.