அஸ்ஸாமில் பயங்கரம்: ஓடும் பேருந்தில் சிறுமியை சீரழித்த டிரைவர், உதவியாளர்
தேஸ்புர்: அஸ்ஸாம் மாநிலத்தில் ஓடும் பேருந்தில் சிறுமி ஒருவர் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தோய்மாரி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கவுஹாத்தியில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். சில காரணங்களுக்காக அவர் அங்கிருந்து தப்பியோடி கோரேஸ்வரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார்.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு சிறுமி அந்த வீட்டில் இருந்து தப்பித்து தேஸ்பூரை அடைந்தார். அங்கிருந்து அவர் கோரேஸ்வருக்கு செல்ல பேருந்தில் ஏறியுள்ளார். டிரைவர் பேருந்தை கோரேஸ்வர் பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் சென்றுள்ளார்.
பின்னர் அவரும், அவரின் உதவியாளரும் ஓடும் பேருந்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பிறகு பேருந்தை அத்ரிகாட் கிராமத்தில் நிறுத்தியுள்ளனர். சிறுமி அவர்களின் பிடியில் இருந்து நேற்று காலை தப்பியோடி அருகில் உள்ள ஆதிவாசி கிராமத்திற்கு சென்று உதவி கேட்டார்.
ஆதிவாசிகள் போலீசாரை அழைத்துக் கொண்டு பேருந்து நின்ற இடத்திற்கு வந்தனர். ஆனால் பேருந்தில் இருந்த டிரைவரும், உதவியாளரும் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சிறுமி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications