'அலர்ட் மோடு'க்கு போன ராணுவம்.. பாஜக எம்எல்ஏ மீது தாக்குதல்.. உச்சக்கட்ட வன்முறை பிடியில் மணிப்பூர்
இம்பால்: மணிப்பூரில் பழங்குடியினருக்கும் மைத்தேயி சமூகத்தினருக்கும் இடையேயான மோதல் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், அம்மாநில எம்எல்ஏ ஒருவர் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள 7 மாநிலங்களில் மணிப்பூர் ஓர் முக்கியமான மாநிலமாகும். மற்ற மாநிலங்களைவிட இங்கு அதிக அளவில் பழங்குடியின சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இதேபோல பழங்குடியினர் அல்லா மைத்தேயி சமூகத்தினரும் வசித்து வருகின்றனர். 53% அளவில் எண்ணிக்கையில் உள்ள இவர்கள் தங்களையும் பழங்குடியினர் சமூகத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் அரசு அதிகாரங்களில் இவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஏற்கெனவே நிறைய சலுகைகளை அனுபவித்து வுருகின்றனர் என்று கூறி இந்த கோரிக்கைக்கு பழங்குடியினர் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மட்டுமல்லாது நாங்கள் மலைகளில் காலங்காலமாக வாழ்ந்து வருகிறோம் ஆனால் அவர்களின் வாழ்க்கை முறை இவ்வளவு கடினமானது அல்ல என்று கூறி மைத்தேயி சமூகத்தினரின் கோரிக்கைக்கு குக்கி உள்ளிட்ட பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 'மைத்தேயி சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்' என்று பாஜக வாக்குறுதி கொடுத்திருந்தது. இதனையடுத்து தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் தற்போது தேர்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்ற வேண்டும் என்று மைத்தேயி சமூகத்தினர் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். மேலே குறிப்பிட்டதை போல இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் எம்பி, எம்எல்ஏவாக இருக்கும் நிலையில் இந்த கோரிக்கையின் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றமும் உத்தரவிட்டது.
ஆனாலும் பாஜக அரசு மௌனமாக இருந்து வந்துள்ளது. இதனையடுத்து மைத்தேயி மக்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களை நடத்த தொடங்கினர். பின்னர் அரசு இவர்களின் கோரிக்கையின் மீது முடிவெடுப்பதாக அறிவித்தது. இங்குதான் பிரச்னையே தொடங்கியுள்ளது. அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து குக்கி உள்ளிட்ட பழங்குடியினர் போராட்டங்களை நடத்த தொடங்கினர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் மணிப்பூர் (ATSUM) சார்பில் புதன்கிழமை பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திட்டமிட்டதை போல சேனாபதி, உக்ருல், காங்போக்பி, தமெங்லாங், சுராசந்த்பூர், சண்டேல் மற்றும் தெங்னௌபல் என 7 மாவட்டங்களில் இந்த பேரணி நடைபெற்றது.
ஆனால் இதற்கு போட்டியாக பழங்குடியினர் அல்லாதவர்களும் பேரணி நடத்தினர். இப்படியாக நடத்தப்பட்ட போட்டி பேரணியானது சுராசந்த்பூர் மாவட்டத்தில் சந்தித்துக்கொண்டபோது கலவரமாக வெடித்தது. கத்தி, அரிவாள் ஆகியவற்றைகொண்டு இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கொடூரமாக தாக்கிக்கொண்டனர். இதில் ஏராளமான வீடுகளுக்கும், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. அதேபோல இரு தரப்பிலும் குறிப்பிட்ட அளவில் சிலர் உயிரிழந்தனர். நிலைமை கையை மீறி செல்வதை பார்த்த மாநில அரசு உடனடியாக ராணுவத்திற்கு அழைப்பு விடுத்தது. இதனையடுத்து 16 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமையான நேற்று ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ வுங்ஜாகின் வால்டே மர்மநபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் பிரேன் சிங்கை சந்தித்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்பி வந்துக்கொண்டிருந்த நிலையில் அவரது காரை மறித்த சிலர் அவரையும், அவரது உதவியாளரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். வுங்ஜாகின் வால்டே பெர்சாவல் மாவட்டத்தின் தன்லோன் தொகுதியிலிருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதேபோல கடந்த கால ஆட்சியில் பழங்குடியினர் துறையின் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இந்த தாக்குதலையடுத்து தற்போது தலைநர் இம்பாலில் உள்ள RIMS மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications