குருவாயூர் : 29 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான சாமி நகைகள் கண்டுபிடிப்பு
குருவாயூர்: கேரளாவின் குருவாயூர் கோவிலில் இருந்து 29 ஆண்டுகளுக்கு மாயமான நவரத்தினமாலைகள் அங்குள்ள கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்திப்பெற்ற கோவில்களில் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலும் ஒன்று. கடந்த 1985-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி கோவில் மேல்சாந்தியாக இருந்த தாமோதரன் நம்பூதிரி மாற்றப்பட்டு கிருஷ்ணன் நம்பூதிரி பொறுப்பேற்றார். அப்போது கோவில் பொக்கிஷ அறையில் இருந்த நகைகளை சரிபார்த்த போது, 3 தங்க மாலைகள் மாயமாகி இருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகம் கோவில் பொறுப்பில் ஏற்கனவே இருந்த தாமோதரன் நம்பூதிரி, அவரது மகன் தேவதாஸ் நம்பூதிரி ஆகியோர் மீது போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நம்பூதிரிகளிடம் விசாரணை நடத்தினர். இதில் மனம் உடைந்த தாமோதரன் நம்பூதிரி தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது கேரள மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியின் கருணாகரன் இருந்தார். குருவாயூர் கோவிலில் நகை திருட்டுப் போன சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, 1987-ல் நடைபெற்ற தேர்தலிலும் முக்கியத்துவம் பெற்றது.
ஆனால் அதற்கு பிறகு இப்பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்து போனது. கோவில் நிர்வாகம் இது தொடர்பாக 'தேவ பிரசன்னம்' பார்த்தனர். அதில், கோவிலில் திருட்டுப் போன நகைகள் அங்குள்ள மணிக்கிணற்றில் உள்ளது என்று தெரிய வந்தது. ஆனால், கோவில் நிர்வாகத்தினர் மணிக்கிணற்றில் நகையை தேடும் முயற்சியில் ஈடுபடவில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் மணிக் கிணற்று நீர் மாசுப்பட்டு காணப்பட்டது. இதனால் கிணற்றை தூர் வார கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. நேற்று இந்த பணிகள் தொடங்கி கிணற்றில் இருந்த சேறுகள் அகற்றப்பட்டது.
அப்போது சேற்றுடன் சேர்ந்த சுவாமியின் நவரத்தின மாலை வெளியே வந்தது. மேலும் தோண்டிய போது, இன்னொரு மாலையில் 15-க்கும் மேற்பட்ட தங்க கற்கள் சிக்கியது.
இதனை கோவிலின் பிரதான நகை ஆசாரி சோதித்து பார்த்து அது சுவாமியின் நகைதான் என்பதை உறுதி செய்தார். இதையடுத்து மீண்டும் கிணற்றை தோண்டும்பணி துரிதப்படுத்தப்பட்டது.
29 ஆண்டுகளுக்கு முன்னர் நகை காணாமல் போய் பரபரப்பு ஏற்பட்டது. இப்போது நகை மீண்டும் கிடைத்து புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications