உத்தரபிரதேச பாணி.. தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க பாஜக பலே திட்டம்! தென் மாநிலங்களுக்கு குறி
தெலங்கானாவிலும் இந்துக்கள் வாக்குகளை மொத்தமாக பெற பாஜக முயல்கிறது. முஸ்லிம்கள் வாக்குகளை காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி ஆகியவை பிரித்துவிடும் என்ற கணக்கு அமித்ஷாவுடையது.
டெல்லி: உத்தரபிரதேச மாநில பாணியில் தெலங்கானாவில் பாஜக வெற்றி கணக்கை துவக்க திட்டம் போட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தெலங்கானாவில் சுற்றுப் பயணம் செய்து இதற்கான திட்டத்தை போட்டுக்கொடுக்க உள்ளார்.
தெலங்கானா சட்டசபைக்கு 2019ல் தேர்தல் நடைபெற உள்ளது. புதிதாக உருவான இந்த மாநிலத்தில் தற்போது தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி ஆட்சி நடந்து வருகிறது.
சட்டசபை தேர்தலும், லோக்சபா தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதால் இதை சரியாக பயன்படுத்த பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. உத்தரபிரதேச பாணியில், தெலங்கானாவிலும் ஆட்சியை பிடிக்க பாஜக தலைவர் அமித்ஷா திட்டமிட்டு காய் நகர்த்துகிறார்.
கர்நாடகா வெற்றி வாய்ப்பு
அடுத்த வருடம் கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜகவுக்குதான் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக சர்வேக்கள் தெரிவிக்கின்றன. எனவே தென் இந்தியாவில் தங்களது அடுத்த குறியாக தெலங்கானாவை தேர்ந்தெடுத்துள்ளார் அமித்ஷா.
தென் இந்தியாவில் கிளை
ஆந்திராவில் பாஜக கூட்டணி ஆட்சி சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்று வருகிறது. கோவாவிலும் பாஜக ஆட்சி நடக்கிறது. கர்நாடகா, தெலங்கானாவில் ஆட்சியை பிடித்துவிட்டால் பாஜக வட மாநில கட்சி என்ற பெயர் மாறி, முழு அளவில் தேசிய கட்சியாக உருமாறிவிடும் என்பது அமித்ஷாவின் கணக்கு. ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீரிலும் கூட ஆட்சியில் அங்கம் வகிக்கும் அளவுக்கு பாஜக முன்னேறியுள்ளதால், இதுவும் சாத்தியம்தான் என்ற கணக்கீடு போட்டு வருகிறார் அமித்ஷா.
உத்தரபிரதேச பாணி
உத்தரபிரதேசம் போலவே, தெலங்கானாவிலும் மதம், ஜாதி ஆகியவற்றை வைத்து ப்ளே செய்ய திட்டமிட்டுள்ளது பாஜக. பொதுவாக இந்துக்கள் ஓட்டுக்குள் வெவ்வேறு கட்சிகளுக்கு போகும். முஸ்லிம்கள் வாக்குகள் காங்கிரசுக்கு செல்லும். ஆனால் இதை மாற்றி, இந்துக்கள் வாக்குகளை பாஜகவுக்கு மட்டுமே கொண்டுவருவதில்தான் உ.பி.யில் பாஜக வெற்றி சூத்திரம் அடங்கியிருந்தது. ஜாதி கணக்கும் விளையாடியது.
முஸ்லிம் வாக்குகள் பிரியும்
தெலங்கானாவிலும் இந்துக்கள் வாக்குகளை மொத்தமாக பெற பாஜக காய் நகர்த்தலை ஆரம்பித்துள்ளது. முஸ்லிம்கள் வாக்குகளை காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவை பிரித்துவிடும் என்ற கணக்கு அமித்ஷாவுடையது.
இட ஒதுக்கீடு பஞ்சாயத்து
தெலங்கானா அரசு முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 12 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது 4 சதவீதமாக உள்ள இட ஒதுக்கீட்டை உயர்த்த பிற மதத்தினர் எதிர்ப்புக்கிடையே முதல்வர் சந்திரசேகரராவ் முயல்கிறார். குறைந்தபட்சம் 9 சதவீதமாவது உயர்த்திவிட அவர் தீவிரம் காட்டுகிறார். இதை ஏபிவிபி மாணவர் அமைப்பு மூலமாக தீவிர பிரசாரம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. இதை வைத்தே இந்துக்களை பாஜக பின்னால் திரளச் செய்வதே அமித்ஷா திட்டமாம்.