குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு-தேவைப்பட்டால் அஸ்ஸாம் பாஜக அரசுக்கான ஆதரவு வாபஸ்-அஸ்ஸாம் கன பரிஷத்
குவஹாத்தி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு அளித்தது தவறு என்றும் அஸ்ஸாமில் தேவைப்பட்டால் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவோம் என்றும் அஸ்ஸாம் கன பரிஷத் தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரஃபுல்ல குமார் மகந்தா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அஸ்ஸாம் கன பரிஷத் ஆதரித்தது. இதற்கு அஸ்ஸாமில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அஸ்ஸாம் கன பரிஷத் தொண்டர்களே கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அஸ்ஸாம் பாஜக அரசில் உள்ள 3 அமைச்சர்களையும் வாபஸ் பெறவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அஸ்ஸாம் கன பரிஷத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரஃபுல்ல குமார் மகந்த அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
2015-ம் ஆண்டு முதலே குடியுரிமை சட்ட திருத்தத்தை நாங்கள் எதிர்த்து வருகிறோம். கட்சியின் சில தலைவர்கள்தான் இந்த சட்ட திருத்தத்தை ஆதரிக்கின்றனர்.
தேவைப்பட்டால் அஸ்ஸாமில் பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவோம். குடியுரிமை சட்ட திருத்தம் என்பது அஸ்ஸாம் மக்களுக்கு எதிரானது. அதனால் உச்சநீதிமன்றத்துக்கு சென்றுள்ளோம்.
மேலும் இச்சட்ட திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கும் நாங்கள் ஆதரவை தெரிவிக்கிறோம். தற்போதைய பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். துப்பாக்கிச் சூடுகள் மூலம் அஸ்ஸாம் மக்களின் குரலை ஒடுக்க முடியாது.
இணைய சேவைகளை துண்டிப்பதன் மூலம் தற்போதைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு. அரசியல் சாசனத்துக்கும் சட்டத்துக்கும் மேலானவர்கள் யாரும் இங்கே இல்லை. நாட்டின் அரசியல் சாசனம் உருவாக்கப்படும் போதே இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றே எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரஃபுல்ல குமார் மகந்தா கூறினார்.












Click it and Unblock the Notifications